இந்தோனீசியாவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் புதிதாக 64 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று பாதித்ததை அடுத்து அங்கு மொத்தம் 514 பேரை அந்த நோய் பீடித்தது.
ஒரே நாளில் 10 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து மொத்தம் 48 பேர் கொரோனாவுக்குப் பலியாகிவிட்டார்கள்.
அவர்களில் மூவர் மருத்துவர்கள். மேலும் 23 சுகாதாரப் பராமரிப்பு அதிகாரிகளுக்கு அங்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
அதேவேளையில், கொரோனா தொற்றியவர்களில் 29 பேர் குணமடைந்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், அரசாங்கம் பொதுமக்களுக்கு நடத்தி வரும் பரிசோதனைகளைப் பிரம்மாண்ட அளவில் விரிவுபடுத்தப் போவதாக கோவிட்-19 நிர்வாக அமைப்பின் பேச்சாளர் யுரியாந்தோ இன்று (மார்ச் 23) குறிப்பிட்டார்.
சீனாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 150,000 பரிசோதனைச் சாதனங்கள் இந்தோனீசியாவுக்கு வந்திருப்பதாகவும் அவை நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு மக்களுக்குப் பரிசோதனைகள் முடுக்கிவிடப்படும் என்றும் கூறிய அவர், அதிக ஆபத்துள்ள சமூகங்களிடையே 1 மில்லியன் பரிசோதனைகளை அரசாங்கம் நடத்தும் என்றும் குறிப்பிட்டார்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வசதிகளை ஏற்படுத்தவும் அரசாங்கம் ஆயத்தமாகி வருகிறது என்றார் அவர்.
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக இன்று முதல் இரண்டு வார கால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது.
முதல் நாளான இன்று மக்களிடையே ஒரே குழப்பம் நிலவியது. ஜகார்த்தாவின் ரயில் நிலையங்களிலும் புறநகர் நிலையங்களிலும் அதிக மக்கள் தேக்கம் காணப்பட்டது.
ரயில் சேவைகள் குறைக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, ரயில்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறி மூச்சுவிடக்கூட இடமில்லாமல் பயணம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஜகார்த்தாவில் ரயில், பேருந்துச் சேவைகள் குறைக்கப்பட்டன. கொரோனா கிருமித் தொற்று காரணமாக தலைநகரம் முடங்கி வருகிறது.
பொதுப் பேருந்துகள் குறைந்து போய்விட்டதால் தங்களால் சரியான நேரத்துக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை என்று தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்தனர்.
ரயில்களில் கூட்டத்தையும் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசைகளையும் காட்டும் படங்கள் காலை முதலே சமூக ஊடகங்களில் வலம் வரத் தொடங்கின.
ஜகார்த்தாவில் மார்ச் 23 முதல் திரையரங்குகள், மதுபானக் கூடங்கள், விளையாட்டுக் கூடங்கள், உடல் பிடிப்பு நிலையங்கள் போன்ற பலவும் இரண்டு வார காலத்திற்கு மூடப்பட்டு இருக்கும். மார்ச் 16 முதலே பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுவிட்டன.
ஜகார்த்தாவில் மட்டும் 29 பேர் கொரோனா கிருமித்தொற்றால் மாண்டுபோயினர்; 307 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜகார்த்தாவில் பாதுகாப்பான இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தோனீசிய அதிபர் வலியுறுத்தி இருக்கிறார்.
ஆனால் அந்த நகரை முடக்கி, தனிமைப்படுத்துவதற்கான உத்தரவு எதையும் அவர் இதுவரையில் பிறப்பிக்கவில்லை.
#இந்தோனீசியா #கொவிட்-19