நியூயார்க்: கொரோனா கிருமித்தொற்று கண்டறியப்பட்ட மூன்றே வாரங்களில் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் நேற்று முன்தினம் புதிய மைல்கல்லை எட்டியது. உலகளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களில் ஐந்து விழுக்காடு நியூயார்க்கில்தான் கண்டறியப்பட்டுள்ளது. கிருமி பரவலைக் கட்டுப்படுத்த மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்த நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரூ குவோமோ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சில வீதிகள் மூடப்படுமாறும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
கிருமி பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் நியூயார்க் நகரின் மூன்று இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்படும் என அவர் அறிவித்தார்.
நியூயார்க் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சிகிச்சைக்கு தேவையான முகக்கவசங்களுக்கும் 'வென்டிலேட்டர்' சாதனங்களுக்கும் தட்டுப்பாடு நிலவக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.
நியூயார்க் மாநிலத்தில் 15,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் நியூயார்க் நகரில் வசிப்பவர்கள். மேலும் அதிகமானோரிடம் கொரோனாவுக்கான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நியூயார்க் மாநிலத்தில் எட்டு பேரில் ஒருவர் கொரோனா பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் நிலவரப்படி, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 114 பேர் உயிரிழந்ததாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவில் பதிவாகியுள்ள மரண எண்ணிக்கையில் அது கிட்டத்தட்ட பாதி அளவாகும். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 31,000ஐ கடந்துவிட்டது. கிருமித்தொற்றால் 390 பேர் உயிரிழந்தனர்.
US President Donald Trump speaking during a coronavirus task force news conference at the White House on Sunday. Nearly one-third of Americans are in various phases of virtual lockdown, including in the three biggest cities of New York, Los Angeles and Chicago, but Mr Trump has so far resisted calls for a uniform shutdown. PHOTO: NYTIMES

