இதுவரை கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் இல்லை என்று கூறி வந்த மியன்மாரைப் பலரும் நம்பாமல் சந்தேகக் கண்களுடன் பார்த்த நிலையில் நேற்று (மார்ச் 23) அங்கு முதல் இரண்டு கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதியாகின.
கிட்டத்தட்ட 54 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மியன்மார், கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவம் ஏதும் அங்கு பதிவாகவில்லை என்று கடந்த பல வாரங்களாக கூறி வந்தது.
ஆனால், திங்கட்கிழமை நிலவரப்படி மியன்மாரில் 214 பேர் மட்டுமே கிருமித்தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய 36 வயது மியன்மார் ஆடவருக்கும் பிரிட்டனிலிருந்து திரும்பிய 26 வயது மியன்மார் ஆடவருக்கும் கிருமித்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து லாவோஸ் அதன் முதல் இரண்டு கிருமித்தொற்று சம்பவங்களை இன்று உறுதிசெய்தது. இருவரும் வெளிநாட்டுக்குச் சென்றதுடன் வெளிநாட்டினருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
#மியன்மார் #கொவிட்-19 #லாவோஸ்