ஜெனீவா: கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும், கிருமி பரவுவதைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் இருப்பதாக அது கூறியது.
கொரோனா கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 15,000ஐ கடந்ததை அடுத்து, உலக சுகாதார நிறுவனம் இவற்றைக் கூறியது. நேற்றைய நிலவரப்படி உலகளாவிய நிலையில் 341,000க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கிருமித்தொற்று தொடங்கி 67 நாட்களில் உலகெங்கும் 100,000 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது. ஆனால் அடுத்த 11 நாட்களிலேயே மேலும் 100,000 பேர் பாதிக்கப்பட்டனர். அதையடுத்து அடுத்த நான்கு நாட்களில் மேலும் 100,000 பேர் நோய்வாய்ப்பட்டனர்.
பதிவு செய்யப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை உண்மையான எண்ணிக்கையின் ஒரு சிறிய பகுதியாக இருக்கலாம் என்று
நம்பப்படுகிறது.
பல நாடுகளில் மிக மோசமான வகையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படுவோருக்கு மட்டும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
“நாம் அனைவரும் ஒன்றும் செய்ய முடியாத பார்வையாளர்கள் அல்ல. கொரோனா கிருமிப் பரவலின் வேகத்தை நாம் குறைக்கலாம்,” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தேட்ரோஸ் அதனோம் கேப்ரியேசுஸ் தெரிவித்தார்.
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரைக் காற்பந்து ஆட்டத்துடன் அவர் ஒப்பிட்டார்.
“தற்காப்பில் மட்டும் ஈடுபட்டால் வெற்றி பெற முடியாது. வெற்றி பெற தாக்குதல் நடத்த வேண்டும். கிருமிக்கு எதிராக மூர்க்கத்தனமாகவும் உத்திபூர்வமாகவும் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
“கிருமித் தொற்று ஏற்பட்டு இருக்கக்கூடும் என சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டோரைப் பார்த்துக்கொள்ள வேண்டும், அவர்களுடன் தொடர்பில் இருந்தோரைத் தனிமைப்படுத்த வேண்டும்,” என்றார் திரு கேப்ரியேசுஸ்.