சிட்னி: ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமி பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதால் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ஸ்காட் மோரிசன், அவசியமற்ற வர்த்தகங்களை மூட உத்தரவிட்டுள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையும் 5ஆக குறைக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்துகொள்ளும் தம்பதி, திருமணத்தை நடத்தி வைப்பவர். இரு சாட்சியாளர்கள் என ஐவர் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்ள முடியும்.
இந்தக் கட்டுப்பாடுகள் சிரமமாக இருந்தாலும் மக்கள் கடைப்பிடிப்பது அவசியம் என்று பிரதமர் மோரிசன் கேட்டுக் கொண்டார்.
இறுதிச் சடங்குக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக பத்து பேர் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 2,250 பேருக்கு கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் புதிதாக 50 பேர் கொரோனா கிருமியால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 205க்கு அதிகரித்துள்ளது.
இதனால் பிரதமர் ஜெஸின்டா ஆர்டெர்ன், அவசரநிலையை அறிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை அமலுக்கு வந்தது.
“நியூசிலாந்தில் நிலைமை மேலும் மோசமாவதற்கு முன்பு நாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்,” என்று பிரதமர் ஜெஸின்டா வலியுறுத்தினார்.
சமூகத்தினரிடையே கிருமி பரவுவது உறுதியானதால் நாடு முடக்கப்படுவதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்று வரை உச்சக்கட்டமாக 50 புதிய கிருமி பாதிப்பு சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன.
“என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதில் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக சிறிய விதிமுறையை பின்பற்றுங்கள்: உங்களுக்கு கிருமித் தொற்றியது போல செயல்படுங்கள்,” என்று பிரதமர் ஜெஸின்டா கூறி யுள்ளார்.