சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற உத்தரவு இப்போது மின்னஞ்சல் மூலம் விடுக்கப்படும். இந்த ஏற்பாடு இன்று காலை 9 மணியிலிருந்து நடப்புக்கு வருவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.
உத்தரவுக்குக் கீழ்ப்படிய தவறினால் எந்த அளவுக்குத் தண்டனை இருக்கும் என்பது முன்னதாகவே அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால வேலை அனுமதி பெற்றுள்ள ஊழியர்கள் உள்ளிட்ட பயணிகள் சிங்கப்பூருக்கு வரும்போது தங்களுடைய சுகாதார விவரங்களை குடிநுழைவுத் துறையிடம் தெரியப்படுத்த வேண்டும். பிறகு அவர்களுக்கு வீட்டிலேயே 14 நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்ற உத்தரவு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
இந்த உத்தரவை SG Arrival Card e-Service என்ற சேவை மூலம் பெறலாம்.
பயணிகள் சிங்கப்பூரில் தரையிறங்குவதற்கு முன்னதாகவே படிவங்களைப் பூர்த்தி செய்யவும் இந்தச் சேவை அனுமதிக்கும்.
சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் அனைவரும் தரையிறங்குவதற்கு முன்னதாக இணையம் வழி சுகாதார தகவல்களைத் தெரியப்
படுத்த வேண்டும் என்று இந்தத் துறை திங்கட்கிழமை அறிவித்து இருந்தது.
வெளிநாடுகளில் இருந்து கொரோனா கிருமிகள் சிங்கப்பூருக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக இடம்பெறும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பயணிகள் செல்லுபடியாகக் கூடிய மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு எண்ணையும் தங்களுடைய சுகாதாரப் படிவத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதை சுற்றுப் பயணிகளுக்கு இந்தத் துறை நினைவூட்டி இருக்கிறது.
குறுகிய கால பயணம் மேற்கொண்டு வருவோர் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாது. சிங்கப்பூர் வழியாகவும் வேறு நாடுகளுக்குப் போக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியாமல் நடந்துகொள்வோருக்குத் தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்கும் என்பதை எடுத்துச் சொல்லி திரும்பத் திரும்ப அதிகாரிகள் எச்சரித்து வருகிறார்கள். வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற உத்தரவை மீறுவோருக்கு $10,000 வரை அபராதம், ஆறு மாதம் வரை சிறை அல்லது இரண்டும் தண்டனையாக கிடைக்கக்கூடும். இதர பல பாதிப்புகளும் அவர்களுக்கு ஏற்படும்.

