லண்டன்: பிரிட்டனில் யாருக்காவது கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை வீட்டிலேயே பரிசோதித்துத் தெரிந்துகொள்ள உதவும் சாதனங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 3.5 மில்லியன் சாதனங்கள் வாங்கப்படுவதாக சுகாதார அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். அந்தச் சாதனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒத்துவருமா, அவை பாதுகாப்பானவையா என்பதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அறிவியல் வல்லுநர்கள் மதிப்பிடுவார்கள் என்றும் அந்தப் பணி முடிந்ததும் சாதனங்கள் விநியோகிக்கப்படும் என்றும் பிரிட்டனின் தொற்றுநோய் நிலைய இயக்குநர் பேராசிரியர் ஷரோன் பீக்காக் குறிப்பிட்டார்.
அந்த இரத்தச் சோதனை சாதனங்கள் Amazon.com வழியாகவும் பிரபல மருந்துக்கடைகள் மூலமாகவும் விற்கப்படும். இதனை வாங்கி வைத்துக்கொண்டு மக்கள் தங்களைத் தாங்களே சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.
ஒருவரின் உடலில் கொரோனா கிருமிக்கு எதிராக எந்த அளவுக்கு எதிர்ப்புச் சக்தி இருக்கிறது என்பதை அந்தச் சாதனம் துல்லியமாகக் காட்டும் என்றும் அந்தப் பேராசிரியர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் குழுவிடம் தெரியப்படுத்தினார்.
பிரிட்டன் மேலும் மில்லியன் கணக்கில் சாதனங்களை வாங்கும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா கிருமி பரவலைத் தடுக்க போதிய அளவுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் பரிசோதனைகளை முடுக்கிவிடவில்லை என்று புகார்கள் தலைதூக்கி இருக்கின்றன.
இந்தச் சூழலில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா கண்காணிப்புகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்.

