ரோம்: இத்தாலியில் பிப்ரவரி 23ஆம் தேதிமுதல் படிப்படியாக நடப்புக்கு வந்த கடுமையான முடக்கநிலையால் இந்நேரம் நாட்டில் கொவிட்-19 கிருமித்தொற்று பரவல் மெதுவடையும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் இவ்வாரத் தொடக்கத்தில் சற்று குறைந்திருந்த கிருமித்தொற்று சம்பவங்களும் மரணங்களும் மீண்டும் அதிகரித்தன.
நேற்று மாலை நிலவரப்படி 24 மணிநேரத்தில் 712 பேர் கிருமி பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர்.
புதிதாக 6,153 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் இத்தாலியில் கிருமித்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 8,215 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கையே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் ஆக அதிகம்.
அதிலும் இந்த எண்ணிக்கையில் பாதி அளவுகூட வேறு நாடுகளில் பதிவாகவில்லை. அத்தடன் இத்தாலியில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,539ஐ எட்டியுள்ளது.
கொரோனா கிருமித்தொற்றின் மையப்பகுதியாக கருதப்பட்ட சீனாவில் தற்போது 81,000க்கு மேலான சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இத்தாலியில் ஏற்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதை விஞ்சி விடுவதாக உள்ளது.
அடுத்த மாதம் 3ஆம் தேதியன்று முடக்கநிலை முடிவடைவதாக இருந்தாலும் கட்டுப்பாடுகளைத் தொடரவேண்டிய சூழ்நிலை இருக்கும் என்று நாட்டின் லொம்பார்டி பகுதி ஆளுநர் கூறியிருந்தார்.