பெட்டாலிங் ஜெயா: இந்தியாவில் சிக்கித் தவிக்கும் கிட்டத்தட்ட 1,988 மலேசியர்களை மீண்டும் தாய்நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக நேற்று மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.
பஞ்சாபில் உள்ள அம்ரிட்சர் பகுதியின் மலேசிய சீக்கியர்களையும் இது உள்ளடக்கும் என்று தற்காப்பு அமைச்சராகவும் பணியாற்றும் திரு இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
மலேசியர்களை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கு 12 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு உதவி வரும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சிக்குத் தன் நன்றியையும் தெரிவித்தார்.
தற்போது கிட்டத்தட்ட 60 நாடுகளில் 3,162 மலேசியர்கள் சிக்கித் தவிப்பதாகவும் சுமார் 2,612 பேர் மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டனர் என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.
கைரோவில் உள்ள மலேசியர்கள் இன்று மீண்டும் கொண்டுவரப்படுவதாகவும் திரு இஸ்மாயில் குறிப்பிட்டார்.
இதற்கிடையே வெளிநாடுகளில் வசித்து வரும் மலேசியர்கள், அந்தந்த நாடு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்குமாறு மூத்த அமைச்சர் நினைவுறுத்தினார்.

