வாஷிங்டன்: அதிகரித்து வரும் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களுக்கிடையே அமெரிக்க மருத்துவமனைகளில் முக்கியமான சிகிச்சை சாதனங்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் ‘வெண்டிலேட்டர்’ எனப்படும் சுவாசத்திற்கு உதவும் கருவிகளை தயாரிக்குமாறு ‘ஜெனரல் மோட்டோர்ஸ்’ (ஜிஎம்) நிறுவனத்துக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் மத்திய அரசு ஆணையைப் பிறப்பித்துள்ளார்.
அதிகம் பயன்படுத்தப்படாத நாட்டின் தற்காப்புத் தயாரிப்பு சட்டத்தின்கீழ், திரு டிரம்ப் ‘ஜிஎம்’ நிறுவனத்திற்கு இவ்வாறு ஆணையிட்டார்.
சுவாசக் கருவிகளைத் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை ‘ஜிஎம்’ நிறுவனத்துடன் நடந்து வந்தது. ஆனால் நிறுவனம் ஒப்பந்தம் தொடர்பில் இழுத்தடித்து வந்ததால் திரு டிரம்ப இவ்வாறு ஆணை பிறப்பித்தார். இதன்படி ‘ஜிஎம்’ நிறுவனம் அதன் வாகன ஆலை ஒன்றில் கருவிகளைத் தயாரிக்கும் பணிக்கு இனி முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்.
“ஜிஎம் தாமதித்துக் கொண்டிருந்தது. இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் உடனே தயாரிக்கப்படும் சுவாசக் கருவிகள் அமெரிக்கர்களின் உயிர்களைக் காப்பாற்றும்,” என்றார் அதிபர் டிரம்ப்.
நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள மத்திய அரசின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தத் தயங்கமாட்டோம் என வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில் அதிபர் குறிப்பிட்டார்.
அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து செயலில் ஏற்கெனவே இறங்கிவிட்டதாகக் கூறியது ‘ஜிஎம்’.
கொரோனா கிருமித்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க பொருளியலைச் சமாளிக்க நேற்று முன்தினம் திரு டிரம்ப் 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$3.1 டிரில்லியன்) மதிப்பிலான ஆதரவுத் தொகுப்புத் திட்டத்திற்குத் தம் ஒப்புதலை வழங்கினார்.
நேற்று முன்தினம் அமெரிக்காவின் மொத்த கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை சீனாவையும் இத்தாலியையும் விஞ்சிவிட்டது.
அமெரிக்காவில் குறைந்தது 100,700 பேர் கிருமி பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அத்துடன் 1,500க்கு மேலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.