நிலைமை சரியாவதற்கு முன் கிருமித்தொற்று மோசமடையும் - போரிஸ் ஜான்சன் : இங்கிலாந்தில் நிலைமை சரியாவதற்கு முன்பு கொரோனா கிருமித்தொற்று மோசமடையும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 30 மில்லியன் பிரிட்டிஷ் மக்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். பிரதமர் ஜான்சனுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டு அவர் தம்மைத் தனிமைப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் இதுவரை 17,089 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. 1,019 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ள முடக்க உத்தரவைப் பின்பற்றுமாறு திரு ஜான்சன் பிரிட்டிஷ் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
தோக்கியோவில் மேலும் 68 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று: தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் மேலும் 68 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதன் மூலம் ஜப்பானில் மொத்தம் 1,700 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். தோக்கியோவில் வசிப்போரையும் அதைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் வசிப்போரையும் அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை தேவையில்லாமல் வெளியே போக வேண்டாம் என்று தோக்கியோவின் ஆளுடர் யுரிக்கோ கோய்கே கேட்டுக்கொண்டார்.
நியூசிலாந்தில் கிருமித்தொற்று காரணமாக முதல் மரணம்: ஆக்லாந்து: கொரோனா கிருமித்தொற்று காரணமாக நியூசிலாந்தில் முதல் மரணம் பதிவாகி உள்ளது. அந்நாட்டில் அந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 514ஆக அதிகரித்துள்ளதாக நியூசிலாந்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிலிப்பீன்சில் மேலும் 343 பேருக்கு கிருமித்தொற்று; மூவர் பலி: மணிலா: பிலிப்பீன்சில் மேலும் 343 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவே ஒரே நாளில் அந்நாட்டில் பதிவாகியிருக்கும் ஆக அதிகமான பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை. பிலிப்பீன்சில் இதுவரை 1,418 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. 71 பேர் மாண்டுள்ளனர்.
இந்நிலையில், 42 பேர் குணமடைந்திருப்பதாக பிலிப்பீன்ஸ் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
தாய்லாந்தில் மேலும் 143 பேர் பாதிப்பு; ஒருவர் மரணம்: பேங்காக்: தாய்லாந்தில் கொரோனா கிருமித்தொற்றால் மேலும் 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் மொத்தம் 1,388 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அந்நோய் காரணமாக மேலும் ஒருவர் இறந்திருப்பதாக தாய்லாந்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்். தாய்லாந்தில் இதுவரை ஏழு பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.