தமது பெயரில் அனுப்பப்பட்டுள்ள போலி மின்னஞ்சல்கள் குறித்து பிரதமர் லீ சியன் லூங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து போலிசிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
அரசாங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறும் அந்த மின்னஞ்சல், கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் குறித்த அண்மைய நிலவரத்தை வழங்குவதுடன் தற்போதைய நிலவரம் பற்றி வாசகர்கள் தங்களது கருத்துகளைப் பதிவுசெய்து அனுப்புமாறு கோருகிறது.
இது பற்றி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று (மார்ச் 30) பதிவிட்ட பிரதமர் லீ, "இத்தகைய மின்னஞ்சலைப் நீங்கள் பெற்றால், அதற்குப் பதிலளிக்காதீர். தனிப்பட்ட விவரங்களைக் கொடுக்காதீர். தயவுசெய்து உங்களது நண்பர்கள், குடும்பத்தாருடன் இந்த மின்னஞ்சலை அனுப்பாதீர்," என்று கேட்டுக்கொண்டார்.
நெருக்கடியான சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்ற முற்படும் மோசடிக்காரர்கள் குறித்து இணையத்தில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் லீ வலியுறுத்தினார்.


