வாஷிங்டன்: அமெரிக்காவின் வீட்டிலேயே இருக்கும் உத்தரவை அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார்.
உலக நாடுகளிலேயே தற்போது அமெரிக்காவில்தான் ஆக அதிகமானோருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
அங்கு 141,000க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 2,460 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் நடுவிலிருந்து பொருளியலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கவிருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்ததை பலர் சாடினர். இந்த முடிவிலிருந்து அவர் நேற்று பின்வாங்கினார்.
"அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஆக அதிகமான மரண எண்ணிக்கை பதிவாகக்கூடும்.
"கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் வெல்வதற்கு முன்பே வெற்றியை அறிவிப்பது பேரழிவை ஏற்
படுத்தும். கிருமித்தொற்றுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்கர்கள் எடுத்தால் இந்தக் கெட்ட கனவு விரைவில் முடிவுக்கு வரும்," என்றார் அதிபர் டிரம்ப்.
கிருமித்தொற்றுக்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் தோல்வி அடைந்தால் அமெரிக்காவில் 100,000 பேரிலிருந்து 200,000 பேர் மரணம் அடையக்கூடும் என்று அமெரிக்காவின் ஓவ்வாமை, தொற்றுநோய் தடுப்புக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் ஆண்டனி ஃபௌச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, ஏப்ரல் மாதம் நடுவில் கொரோனா கிருமித்தொற்றைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுகளைத் தளர்த்த முதலில் எடுக்கப்பட்ட முடிவு தவறானதா என்று அதிபர் டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அதிபர், கட்டுப்பாட்டுகளைத் தளர்த்தி பொருளியலில் கவனம் செலுத்த தாம் ஆசைப்பட்டதாகக் கூறினார்.
வரும் ஜூன் 1ஆம் தேதிக்குள் பொருளியலை மீட்கும் பணிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தாம் நம்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

