கோலாலம்பூர்: மலேசியா, கொரோனா கிருமித்தொற்று பரவு வதைத் தடுக்க நாடு முழுவதும் மருந்தடித்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறது.
அதிக ஆபத்துள்ள சில இடங்கள் நேற்று முதல் கிருமிநாசினி மருந்துகள் அடித்து சுத்தப்படுத்தப் படுவதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தலைநகர் கோலாலம்பூரில் பரந்த அளவிலான மருந்தடிப்பு நடவடிக்கையை ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் நகர மண்டபம் மேற்கொண்டது.
பேராக் மாநிலத்தில் உள்ளூர் அதிகாரிகள், பொது இடங்கள், பூங்காக்கள், வழிபாட்டு தலங்கள், போலிஸ் நிலையங்களை மருந்தடித்துச் சுத்தப்படுத்தினர்.
ஈப்போ ரயில் நிலையத்திலும் தாப்பா மாவட்ட போலிஸ் தலைமை யகத்திலும் தீயணைப்புத் துறை மருந்தடித்தது.
இதே போன்ற நடவடிக்கைகள், சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் ஆகிய இடங்களில் சந்தைகளிலும் பொதுக் கழிவறைகளிலும் உணவுக் கடைகளிலும் பேருந்து நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.
பினாங்கு, திரங்கானு, கெடா மாநிலங்களில் நேற்று சுத்தப்படுத்தும் நடவடிக்கை தொடங்கியது.
கொரோனா கிருமியைக் கட்டுப் படுத்தும் முயற்சியாக மலேசியா மார்ச் 18ஆம் தேதி பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
பயணக் கட்டுப்பாடுகளும் நடப்புக்கு வந்தன. அந்த உத்தரவு ஏப்ரல் 16 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அந்த விதியை மீறியதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் கொரோனா கிருமி 30 பேரை கொன்றுவிட்டது. 2,400 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தென்கிழக்கு ஆசியாவில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு அதிகம் பேர் பாதிக்கப்படவில்லை.
கொரோனா காரணமாக உலகின் பல பகுதிகளிலும் நடப்புக்கு வந்திருக்கும் பயணக் கட்டுப்பாடு களால் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மலேசியர்களை தாயகம் கொண்டு வருவதற்காக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம், வரும் ஏப்ரல் முதல் மே வரை சில அனைத்துலகச் சேவைகளைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

