பெய்ஜிங்: சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் (மார்ச் 29) உறுதிசெய்யப்பட்டது.
அவர்களில் ஒருவருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது.
முந்தைய நாள் பதிவான 45 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவு.
கிருமித்தொற்று பாதிப்பால் மேலும் நால்வர் உயிரிழந்ததாக ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
அவர்களையும் சேர்த்து, சீனாவில் கிருமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று நிலவரப்படி 3,304ஆக பதிவானது.
அந்நாட்டில் கிருமித்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 81,470ஆக உயர்ந்தது.
கொரோனா கிருமித்தொற்று தொடங்கிய ஹுபெய் மாநிலத்தில் நேற்று முன்தினம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை.
அறுபது மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஹுபெய் மாநிலத்தில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சீனாவின் மற்ற பகுதிகளுக்கு உள்நாட்டு விமானச் சேவைகள் தொடங்கப் பட்டுள்ளன.
எனினும், ஹுபெய்யிலிருந்து சீனாவின் வடமேற்கு மாநிலமான கான்சுவுக்கு பயணம் செய்த நபர் ஒருவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள போதிலும், வெளிநாடுகளில் கிருமித்தொற்றுக்கு ஆளாகி சீனா வருபவர்களால் மீண்டும் மற்றொரு கிருமித்தொற்று அலை எழும் அபாயம் குறித்து பெய்ஜிங் கவலை அடைந்துள்ளது. நாட்டில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த, வெளிநாட்டினர் சீனாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வரும் அனைத்துலக விமானச் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் ஆதரவுக் கொள்கைகளை அரசாங்கம் திருத்தி அமைக்கும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் உறுதி அளித்து இருக்கிறார்.
ஷெஜியாங் என்ற கிழக்கு மாநிலத்தில் நிங்போ என்ற நகரில் ஒரு தொழிற்சாலைக்கு ஞாயிற்றுக் கிழமை சென்ற அதிபர் ஸி, கொரோனா ஒழிப்புப் போர் ஒருபுறம் நடந்தாலும் சீன நிறுவனங்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

