இந்தோனீசியாவில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த, அந்நாட்டிற்குள் வெளிநாட்டினர் நுழைவதற்கும் அந்நாட்டின் வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்வதற்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் நேற்று காணொளி வழியாக அமைச்சர்கள் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள், அரசதந்திரிகளுக்கு மட்டும் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
“எங்களது தற்போதைய கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும் என அதிபர் கூறினார். அதன் பொருட்டு இந்தத் தடை நடப்பு வருகிறது,” என்று திருவாட்டி ரெட்னோ கூறினார்.
இந்தோனீசியாவில் குடிமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அதன் நடைமுறைகளைத் தீவிரப்படுத்தவிருப்பதாக அமைச்சர்களுடன் நடத்திய சந்திப்புக்கு முன்னதாக அதிபர் விடோடோ கூறியிருந்தார்.
எனினும், வெளிநாடுகளில் கிருமித்தொற்றுக்கு ஆளாகி இந்தோனீசியாவுக்கு வருபவர்களிடமிருந்து மற்றவர்களுக்குக் கிருமி பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்தோனீசியாவில் கொரோனா கிருமி பரவும் மையப் பகுதியாக தலைநகர் ஜகார்த்தா விளங்குகிறது.
அந்நாட்டில் பதிவாகியுள்ள 1,400க்கும் அதிகமான கிருமித்தொற்று சம்பவங்களில் கிட்டத்தட்ட பாதியளவு ஜகார்த்தாவில்தான் பதிவாகின.
இந்தோனீசியாவில் கிருமித்தொற்று பாதிப்பால் இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்காசியாவிலேயே இந்தோனீசியாவில்தான் ஆக அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
“ஒவ்வொரு நாட்டில் உள்ள நிலவரத்தைப் பொறுத்து பயணிகளின் வருகையை ஏராளமான நாடுகள் கட்டுப்படுத்தியுள்ளன,” என்று திருவாட்டி ரெட்னோ சொன்னார்.
தாயகம் திரும்பும் இந்தோனீசியர்களில் பெரும்பாலானோர் மலேசியாவில் பணிபுரிந்து வந்தனர். சொகுசுக் கப்பல்களில் பணிபுரியும் இந்தோனீசியர்களும் நாடு திரும்புவதாக திருவாட்டி ரெட்னோ கூறினார்.
இந்தோனீசியாவுக்கு மேற்குறிப்பிடப்பட்ட இரு பிரிவினரின் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதை அவர் சுட்டினார்.
“மலேசியாவில் வசிக்கும், வேலை செய்யும் இந்தோனீசியர்களின் எண்ணிக்கை 1 மில்லியனுக்கும் அதிகம். அதுபோக, 80 சொகுசுக் கப்பல்களில் 11,838 இந்தோனீசியர்கள் பணிபுரிகின்றனர்,” என்றார் திருவாட்டி ரெட்னோ.
இவர்களது வருகையை முன்னிட்டு விமான நிலையங்கள், கடல் துறைமுகங்கள், எல்லை சோதனைச் சாவடிகளில் அரசாங்கம் முறையான சுகாதார நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
#இந்தோனீசியா #கொவிட்-19 #வெளிநாட்டினர் வருகைக்குத் தடை