கொரோனா கிருமி பரிசோதனைக் கூடாரத்தைத் திருடிச் சென்று ‘தொல்லையை இழுத்து தோளில் போட்டுக்கொண்டனர்’ நியூசிலாந்தில் சில திருடர்கள்.
அந்தக் கூடாரத்தைத் தொட்டதால் அவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அவர்கள் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் போலிசார் எச்சரித்துள்ளனர்.
ஆக்லாந்தில் உள்ள மருத்துவமனைக்கு வெளியில் இருந்த கூடாரத்தை அவர்கள் திருடிச்சென்றதாக போலிசார் நேற்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தனர்.
கொரோனா கிருமித்தொற்று பரிசோதனைக்காக கூடாரத்தை நேற்றுக் காலை தேடிய மருத்துவப் பணியாளர் அது காணாமல் போனதைக் கண்டுபிடித்தார்.
“சில முட்டாள்கள் வந்து எங்களது கூடாரத்தைத் திருடி சென்றுள்ளனர். அது கொவிட்-19 பரிசோதனைக் கூடாரம்,” என்று ஈஸ்ட் ஹெல்த் டிரஸ்டின் தலைவர் லோரெட்டா ஹேன்சன் குறிப்பிட்டார்.
“பூமிக்குள் புதைக்கப்பட்ட கூடாரத்தின் கம்பிகள் கான்கிரீட் கொண்டு பூசப்பட்டிருந்தன. நிலத்தின் மேலிருந்த கூடாரத்தின் பகுதியை மட்டும் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்,” என்றார் அவர்.
அந்தக் கூடாரத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு திருடர்களுக்குக் கோரிக்கை விடுத்த மனுக்காவ் கவுன்டியின் போலிஸ் சார்ஜன்ட் பிரெட் மீலே, தங்களுக்கு கிருமித்தொற்று உள்ளதா என்பதை அவர்கள் உடனடியாக பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்றார்.
“அந்தக் கூடாரம் எங்கிருக்கிறது என்பதை எங்களுக்குத் தெரிவித்தால் போதும், உங்களது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. நாங்களே எடுத்துக்கொள்வோம்,” என்றும் திரு மீலே கூறினார்.
நியூசிலாந்தில் இதுவரை 650 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; ஒருவர் உயிரிழந்தார்.
#நியூசிலாந்து #கொவிட்-19 #கூடாரம்