வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்று மோசமாக பரவுகிறது. நாள்தோறும் மரணங்களும் பாதிப்புகளும் கிடுகிடுவென கூடி வருகின்றன. முகக்கவசங்கள், செயற்கை சுவாசக்கருவிகள் போன்ற பலவும் அமெரிக்காவுக்கு அவசரமாக அதிக அளவில் தேவைப்படுகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபலமான 3M நிறுவனம், வெளிநாடுகளில் தயாரிக்கும் முகக்கவசங்களை வெளிநாடுகளுக்கு விற்கக்கூடாது என்றும் அந்த நிறுவனம் அப்படிச் செய்வதை உடனே தடுக்கவேண்டும் என்றும் அமெரிக்க அதிபருக்கு நெருக்கடி அதிகமாகி வருகிறது.
அமெரிக்காவின் மின்னிசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த 3M என்ற நிறுவனம் உலக நாடுகளில் பலவற்றிலும் செயல்படுகிறது. மருத்துவ, சுகாதாரத் துறை பொருட்களை அது தயாரிக்கிறது. அந்த நிறுவனம் பிற நாடுகளில் தயாரிக்கும் முகக்கவசங்களை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்துவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விரும்புகிறார்.
இதற்காக கொரியா போர்க்காலத்தில் அமலில் இருந்த ஒரு சட்டத்தை அமெரிக்க நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.
‘தற்காப்பு தயாரிப்புச் சட்டம்’ என்ற கொரியப் போர்க்கால சட்டம், ஓர் அமெரிக்க நிறுவனம் அமெரிக்காவுக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்த அதிபர் விரும்பவில்லை என்றாலும் இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், வெளிநாடுகளில் தான் தயாரிக்கும் முகக் கவசங்களை 3M நிறுவனம் அமெரிக்காவுக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் நோக்கத்தில் அந்தச் சட்டத்தை அமெரிக்க நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. அமெரிக்காவில் 3M தயாரிக்கும் முகக்கவசங்களை ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்படும்.