தாய்லாந்தில் மேலும் 89 பேருக்குப் பாதிப்பு; ஒருவர் மாண்டார்
பேங்காக்: தாய்லாந்தில் மேலும் 89 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது அந்நோய் காரணமாக நேற்று ஒருவர் மரணம் அடைந்தார்.
தாய்லாந்தில் மொத்தம் 2,067 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தாய்லாந்தில் தரையிறங்க அனைத்துப் பயணிகள் விமானங்களுக்கும் அந்நாடு தடை விதித்துள்ளது.
பிலிப்பீன்சில் எட்டு பேர் மரணம்; மேலும் 76 பேருக்குக் கிருமித்தொற்று
மணிலா: பிலிப்பீன்சில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக எட்டு பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 76 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். பிலிப்பீன்சில் கிருமித்தொற்று காரணமாக இதுவரை 144 பேர் இறந்துள்ளனர். மொத்தம் 3,094 பேருக்குக் கிருமி தொற்றியுள்ளது. அந்நாட்டு அமைச்சர்களில் பலர் தங்கள் சம்பளத்தில் 75 விழுக்காட்டுத் தொகையை கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நன்கொடை வழங்க இருப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இந்தோனீசியாவில் 2,000க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் மேலும் 106 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மொத்தம் 2,092 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
தோக்கியோவில் முதல்முறையாக 100க்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு
தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் ஏறத்தாழ 118 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. தோக்கியோவில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
இதன் மூலம் தோக்கியோவில் மொத்தம் 891 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
தோக்கியோவாசிகளை வீட்டிலேயே இருக்கும்படி ஜப்பானிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தோக்கியோவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் ஜப்பானில் அவசரகாலம் பிரகடனம் செய்யப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.