மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமி வேகம் குறைந்து வருகிறது என்று அந்த நாட்டின் சுகாதார அதிகாரிகள் பலரும் நம்பத் தொடங்கி இருக்கிறார்கள். இருந்தாலும் தொடர்ந்து விழிப்பு நிலை அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒரு மீட்டர் இடைவெளி விதியைத் தொடர்ந்து பல மாதங்களுக்குக் கடைப்பிடித்துவரவேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்துக்கு முந்தைய 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா கிருமித் தொற்றியவர்கள் எண்ணிக்கை 181 ஆக இருந்தது.
அவர்களையும் சேர்த்து மொத்தம் 5,635 பேர் பாதிக்கப்பட்டனர். 34 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
அன்றாடம் கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் விகிதாச்சாரம் 5 விழுக்காட்டுக்குக் குறைவாக இருக்கிறது. கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில் நிலவிய அளவுடன் ஒப்பிடுகையில் இப்போது புதிதாக கிருமித்தொற்றுவோரின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்குக் கூட இல்லை.
இந்நிலையில் கருத்து கூறிய நியூ சவுத் வேல்ஸ் சுகாதார பாதுகாப்புத் துறை இயக்குநர் ஜெரோமி மெக்அனுல்டி, இந்த நிலவரம் நம்பிக்கை அளிப்பதாகக் கூறினார்.
இருந்தாலும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு ஆஸ்திரேலிய மக்கள் ஒரு மீட்டர் இடைவெளி நியதியைக் கடைப்பிடிக்க வேண்டி இருக்கும் என்று சுகாதார அமைச்சர் ஹண்ட் கருத்து கூறினார்.
அடுத்த ஆறு மாத காலம் நமக்குச் சிரமமாகத்தான் இருக்கும். அதைச் சமாளித்துதான் ஆக வேண்டும் என்றார் அவர்.