மட்ரிட்: அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஸ்பெயினுக்கு சென்றடையவிருந்த நூற்றுக் கணக்கான சுவாசக் கருவிகள், மருத்துவ உபகரணங்களைத் தர மறுப்பதாகத் துருக்கி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள் இதற்காக ஏற்கெனவே மில்லியன் கணக்கான தொகையை செலுத்தியிருந்த போதிலும், துருக்கி ‘தங்கள் சொந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற் காக’ சுவாசக் கருவிகளைத் தடுத்து வைத்து இருப்பதாக ஸ்பெயின் கூறியது.
சுவாசக் கருவிகளைக் கொடுப்பதில் துருக்கிய அதிகாரிகளைச் சம்மதிக்கச் செய்வதில் தான் தோற்றுவிட்டதாக ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் சொன்னார். ஸ்பெயின் வட்டார தலைவர்களில் ஒருவரான எமிலியானோ ‘துருக்கி ஒருதலைப்பட்சமாக முடிவு செய்து உள்ளது’ என்றார்.
இதற்கிடையே, ஸ்பெயினில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வரும் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124,736 ஆகும். பலியானவர்களின் எண்ணிக்கை 11,744 ஆகும்.