தோக்கியோ: ஜப்பானில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டுப் பிரதமர் ஷின்ஸோ அபே (படம்) இன்று நெருக்கடி நிலையை அறிவிக்கக்கூடும். அது ஒரு மாத காலத்திற்கு நடப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தைப் பிரதமருக்கு வழங்கும் விதமாக அரசமைப்புச் சட்டம் கடந்த மாதம் திருத்தியமைக்கப்பட்டது.
கிருமித்தொற்றால் பேராபத்து ஏற்படும் நிலையிலோ, பொருளியல் மோசமாகப் பாதிக்கப்படும் நிலையிலோ பிரதமர் அபே நெருக்கடி நிலையை அறிவிக்க அது வகைசெய்கிறது.
நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்தால் வர்த்தகங்கள் மற்றும் பொருளியல் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எண்ணிய திரு அபே, நெருக்கடி நிலையை அறிவிக்க தயக்கம் காட்டி வந்தார். எனினும், கிருமித்தொற்று நிலவரம் மோசமடைவதைத் தவிர்க்க கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி திரு அபேவுக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டது.
ஜப்பானில் இதுவரை 3,500 பேருக்கும் அதிகமானோருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உள்ளது.
மற்ற நாடுகளுடன் ஒப்புநோக்க, ஜப்பானில் பாதிப்பு குறைவு என்றாலும், தலைநகர் தோக்கியோவில் அண்மையில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவது அரசாங்கத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. தோக்கியோவில் 1,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டால், மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும்படியும் வர்த்தகங்களை மூடும்படியும் பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்யும்படியும் உத்தரவிடப்படலாம்.
இந்நிலையில், ஜப்பானில் நூற்றுக்கணக்கான பில்லியன் வெள்ளி மதிப்பிலான உதவித் திட்டம் இவ்வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

