வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா கிருமித் தொற்றின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நகரங்கள் சிலவற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 'சமநிலையை' எட்டும் நம்பிக்கை தெரிவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்கள் இருளின் முடிவில் ஓர் ஒளியைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.
அமெரிக்காவில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் மாநிலத்தில், ஞாயிற்றுக்கிழமைஅன்று மாண்டவர்களின் எண்ணிக்கை 600ஆகப் பதிவானது.
ஆயினும் மாண்டவர்களின் எண்ணிக்கை அந்த வாரத்தில் முதன்முறையாக முந்திய நாளைவிட குறைவாக பதிவானது குறிப்பிடத்தக்கது. இதோடு நியூயார்க்கில் மாண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,159ஆக உள்ளது.
மாண்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதைச் சுட்டி பேசிய டிரம்ப், "அது ஒரு நல்ல அறிகுறியாக இருக்கலாம்," என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
"நம்பிக்கை ஒளி தெரியத் தொடங்கியுள்ளது. ஆனால், இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் நாம் ஒரு போதும் மகிழ்ச்சி அடையக் கூடாது," என்றார் டிரம்ப்.
நியூயார்க், மிச்சிகன் மற்றும் லூசியானா போன்ற இடங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களில் வருவதற்கான சிக்கலின் அறிகுறியாகும் என்று அரசாங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே, பென்சில்வேனியா, கொலராடோ, வாஷிங்டன் மாநிலங்களில் கிருமித் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
"நாடு முழுவதும் இந்த நிலை வரப்போகிறது. அமெரிக்கர்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று எச்சரித்துள்ளார் அமெரிக்க தலைமை அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெரோம் ஆடம்ஸ்.
மேலும் பியல் ஹார்பர், இரட்டை கோபுரத் தாக்குதல் ஆகியவற்றின் போது அனுபவித்த வேதனைகளைப் போன்று வரும் சில வாரங்களில் அமெரிக்க மக்கள் அனுபவிக்கப்போகிறார்கள் என்றும் அவர் சொன்னார்.
அமெரிக்காவில் கிருமித் தொற்றுக்கு இதுவரை 9,100 பேர் மாண்டுவிட்டனர். 321,000 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்து வரும் வாரங்களில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் அமெரிக்க மக்கள் உயிரிழக்கக் கூடும் என வெள்ளை மாளிகை மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து
உள்ளனர்.

