புதுடெல்லி: கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் ஹைட்ராக்ஸிகுளோரோ குயின் மருந்தை மனித நேயத்தின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
"24 மருந்துப் பொருட்கள் மற்றும் மூலக்கூறுகள் மீது இந்திய மத்திய அரசு விதித்திருந்த ஏற்றுமதி தடை ரத்து செய்யப்பட்டு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
"இந்த தடை நீக்க அனுமதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு பயந்து அல்ல, மனிதாபிமானத்தின் அடிப்ப டையில் எடுக்கப்பட்டட முடிவு," என்றும் இந்திய அரசு கூறியுள்ளது.
உயிர்க்கொல்லி கிருமியான கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கும் தன்னை நம்பியுள்ள அண்டை நாடுகளுக்கும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் பாரசிட்டமால், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகத்தில் நேற்று மாலை நேரத்துடன் 75,000 பேரின் உயிரைப் பறித்துள்ள கொரோனா கிருமியை அழிப்பதற்கு ஏதுவாக 24 மருந்துகளின் ஏற்றுமதி தடையை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தை, தாங்கள் கேட்டபடி இந்தியா கொடுக்க முன்வராவிட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் நேற்றுமுன்தினம் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட அண்டை நாடுகளின் தேவைக்கு ஏற்ப ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்திருப்பதாக ஏஎன்ஐ ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு 3,67,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 11,000 பேர் உயிரிழந்துவிட்டனா். அடுத்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

