ஜோகூர்: மலேசியாவின் ஜோகூரில் பொதுமக்கள் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக கைதானோர் எண்ணிக்கை 1,044 ஆகியது என்று அந்த மாநிலத்தின் போலிஸ் தலைமைத் தளபதி டத்தோ அயோப் கான் மைதீன் கூறினார்.
அந்த விதியை மீறி கைதானவர்களில் 554 பேர் மீது ஏற்கெனவே நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைதான அனைவரும் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுவர் என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார். குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுவரை சிறையும் 1,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டை மீறு வோருக்கு எதிராக போலிஸ் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே, மலேசியாவின் பிரபல நடிகையான புத்ரி ஆயிஷாவுக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
அந்த நடிகையின் நிர்வாகியான அமான் டாங்கின் இன்ஸ்ட கிராம் பக்கத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதியன்று இந்த அறிவிப்பு இடம் பெற்றது. நடிகை உடலில் கிருமித்தொற்றுக்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என்றும் இமான் தெரிவித்ததாக ஹரியான் மெட்ரோ குறிப்பிட்டது. நடிகை ஆயிஷா, 25, படப்பிடிப்பு தொடர்பில் மார்ச் 9ல் ஸ்காட்லாந்து சென்றுவந்தார்.
இவ்வேளையில், சிங்கப்பூரில் இருந்து திரும்பும் மலேசியர்கள், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதைக் காட்டும் மருத்துவச் சான்றிதழைக் கட்டாயம் தாக்கல் செய்யவேண்டும் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது.
இந்த விதியை முற்றிலும் கடைப்பிடிக்கும்படி ஜோகூர் குடிநுழைவுத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய சான்றிதழைக் கொண்டுவராதவர்கள் ஜோகூரில் 14 நாட்கள் தனித்து வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

