லண்டன்: கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செயற்கை பிராணவாயு உதவியோடு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.
இந்த நிலையில், அவருடைய பொறுப்பிலிருந்து எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் எப்படி எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்ட 55 வயது ஜான்சனின் உடல் வெப்பநிலை அதிகரித்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திங்களன்று தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
செயற்கை பிராணவாயுவின் உதவியோடு இருக்கும் ஜான்சனுக்கு சுவாச கருவி எனும் வென்டிலேட்டரின் உதவி தேவைப்படவில்லை. நியமிக்கப்பட்ட துணை பிரதமரும் வெளியுறவு செயலாளருமான டோமினிக் ராப், ஜான்சனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் விரைவில் அவர் பணிக்குத் திரும்புவார் என்றும் கூறினார்.
இதற்கிடையே, நெருக்கடியான இந்த நிலையில் பிரிட்டன் எவ்வளவு காலத்திற்கு முடக்கப்பட வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படக்கூடிய நீண்டகால தாக்கங்களையும் குறித்து பிரிட்டன் அமைச்சர்கள் விவாதித்தனர்.
ராப்பிற்கு ஜான்சன் சில அதிகாரங்களைக் கொடுத்திருந்தாலும் முடக்க உத்தரவைத் திரும்பப் பெறுவது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் தேவை என்றும் கூறுகின்றனர் இங்கிலாந்து அரசியல் தலைவர்கள்.

