வாஷிங்டன்: கொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாகச் சாடிய டிரம்ப், அந்த அமைப்புக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியை நிறுத்த போவதாக மிரட்டியுள்ளார்.
கொவிட்-19 நெருக்கடி நிலையைச் சமாளிக்கத் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தற்காத்துப் பேசிய டிரம்ப், கிருமித் தொற்று பரவல் குறித்து எச்சரிப்பதில் உலக சுகாதார நிறுவனம் மெதுவாகச் செயல்பட்டதாகச் சாடினார்.
மேலும் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்
படுவதாகவும் அவர் ஆவேசமடைந்தார்.
"அனைத்துலக பயணத்தைத் தடை செய்ய நான் முன்பே எடுத்த முடிவை உலகச் சுகாதார அமைப்பு விமர்சனம் செய்து, தவறான தகவலைப் பரப்பிவிட்டது.
"நிறைய விஷயங்களில் உலகச் சுகாதார அமைப்பு தவறு செய்துவிட்டது. நிறைய தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்தும் அவர்கள் அதனை உலகிற்குத் தெரிவிக்காமல், சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.
"உலகச் சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா 58 மில்லியன் டாலர் நிதியளித்து வருகிறது. ஆனால் இதனை மறு பரிசீலனை செய்ய விரும்புகிறேன். அமைப்பிற்குக் கொடுக்கும் நிதியை நிறுத்தி வைக்கப் போகிறேன்," என்று மிரட்டல் விடுத்துள்ளார் டிரம்ப்.

