ஆஸ்டின்: கிருமித் தொற்றால் அமெரிக்காவில் நேர்ந்துள்ள உயிரிழப்புகளில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அதிகம் பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் லூசியானா, மிச்சிகன் மற்றும் இலினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
லூசியானாவில் ஏற்பட்ட 512 உயிரிழப்புகளில் 70 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டவர்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்று கூறியுள்ளார் அதன் ஆளுநர் ஜான் எட்வட்ஸ்.
அதுபோல் மிச்சிகனில் கிருமித் தொற்றால் மாண்டவர்களில் 40 விழுக்காட்டினர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்.
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அதிகம் உயிரிழப்பதற்குச் சுகாதார சேவை கிடைப்பதில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இதுதவிர ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் அதிகமானோருக்கு நீரிழிவு நோய், நுரையீரல் நோய், இதயக்கோளாறு அதிகமாக இருக்கிறது.
ஏற்கெனவே உடல்நலக் குறைவு உள்ளவர்கள் கொரோனா கிருமித் தொற்றால் அதிவேகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

