சீனாவின் வூஹான் மாநிலத்தைச் சேர்ந்த 61 வயது ஆடவர் ஒருவர், இவ்வாண்டு ஜனவரி 9ஆம் தேதியில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு பலியான முதல் நபர். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்நோயால் 100,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.உலகளாவிய நிலையில் இந்நோயால் 1.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசியாவில் தொடங்கிய இந்நோய்ப்பரவல் இப்போது ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் உலுக்கி வருகிறது.இதனால் உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பலவற்றை உலக அரசாங்கங்கள் செயல்படுத்தி வந்தபோதும், நாள்தோறும் இந்நோயால் மடிவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தின் மத்திய பகுதியில் 500க்குக் குறைவாக இருந்த அந்த எண்ணிக்கை இம்மாதத் தொடக்கத்தில் வெகுவாக அதிகரித்து இப்போது சுமார் 7,500 ஆக உள்ளது.
கடந்த எட்டு நாட்களில் பதிவான மரண எண்ணிக்கை, அதற்கு முந்திய 84 நாட்களில் பதிவான மரண எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம். இதுவரையில் குறைந்தது 100, 859 பேர் இந்நோய்க்கு பலியானதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குணமானோரின் எண்ணிக்கை தற்போது 335, 900 ஆக உள்ளது.
இதுவரையில் இந்நோயால் ஐரோப்பா ஆக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் இந்நோயால் ஏற்படும் மரணங்களில் 70 விழுக்காடு ( 70, 270 பேர்) ஐரோப்பாவைச் சேர்ந்து. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியும் ஸ்பெயினும் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நோயால் இத்தாலியிலில் இதுவரை 18,849 பேரும் ஸ்பெயினில் இதுவரை 15, 843 பேரும் உயிரிழந்தனர்.

