வாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் கொரோனா கிருமித்தொற்றுக்கு இலக்காகி 2,108 பேர் மாண்டுவிட்டார்கள்.
வேறு எந்தவொரு நாட்டிலும் இதுவரை 24 மணி நேரத்தில் மரண எண்ணிக்கை இந்த அளவுக்கு இருந்ததில்லை என்பது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்றுக்கு 18,777 பேர் பலியாகிவிட்டார்கள்.
அமெரிக்காவில் கிருமி தொற்றியோர் எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டிவிட்டது.
சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 8.30 மணி அளவில் அமெரிக்காவில் 502,876 பேரை கிருமி தொற்றி இருந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
வெள்ளிக்கிழமை மட்டும் கொரோனா கிருமியால் 35,098 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சான் ஃபிரான்சிஸ்கோவில் ஆதரவற்றோர் தங்குவதற்கான தற்காலிக முகாம் ஒன்றில் 70 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் இருவர் முகாம் ஊழியர்கள் ஆவர்.
இம்முகாமில் 400 பேர் வரை தங்க இடவசதி உள்ளதாக அறியப்படுகிறது. கடந்த சில வாரங்களில் இந்த எண்ணிக்கை 144 ஆக குறைக்கப்பட்டது.
பின்னர் அனைவருக்கும் கிருமி சோதனை செய்யப்பட்டதை அடுத்து முதலில் ஐந்தாக இருந்தது பின்னர் 70 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பதாக உறுதியானது.
இத்தகைய தங்குமிடங்களில் பதிவாகியுள்ள மிகப் பெரிய கிருமித்தொற்று குழுமம் இது என்று கூறப்படுகிறது.
ஆதரவற்றோருக்கு ஏற்கெனவே சுவாசப் பிரச்சினைகள் இருந்தால், இதுபோன்ற தங்குமிடங்கள் மேலும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
சான் ஃபிரான்சிஸ்கோவில் கிட்டத்தட்ட 8,000க்கும் மேற்பட்டோர் இவ்வாறு ஆதரவற்ற நிலையில் தங்க இடமில்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

