சோல்: வடகொரியாவில் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து மக்களைக் காக்க இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் நடப்புக்கு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் அதிபர் கிம் ஜோங் உன் தலைமையில் நடந்த ஆளும்கட்சியின் மத்தியக் குழு அரசியல் பிரிவு கூட்டத்தில் அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடகொரியாவில் கொரோனா கிருமி காரணமாக பொருளியல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இருந்தாலும் சூழ்நிலையைச் சீராக வைத்திருக்க கடுமையான தலைசிறந்த அவசரகால முயற்சிகளை எடுத்து கிருமித்தொற்றை அரசாங்கம் சமாளித்து வருகிறது என்று அந்த நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
வடகொரியாவில் 500க்கும் அதிகமான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் யாருக்கும் கொரோனா கிருமி தொற்றி இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்திற்கான வடகொரிய அதிகாரி தெரிவித்து உள்ளார்.
வடகொரியாவை ஆளும் கொரிய பட்டாளிக் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் பிரிவுக் கூட்டம் சனிக்கிழமை நடந்தது. அதில் கலந்துகொண்ட அதிபரும் அதிகாரிகளும் முகக்கவசங்களை அணிந்திருக்கவில்லை. ஒரு மீட்டர் விதியையும் அவர்கள் பின்பற்றியதாகத் தெரியவில்லை.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் உச்ச ஆட்சிக் குழுவிடம் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால் அந்த ஆட்சிக் குழு எப்போது கூடும் என்ன முடிவு எடுக்கும் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
இவ்வேளையில், அதிபரின் சகோதரியும் அரசாங்க மூத்த அதிகாரியுமான கிம் யோ ஜோங் ஆளும் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் பிரிவின் மாற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்று அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே, பக்கத்து நாடான தென்கொரியாவில் சனிக்கிழமை வரை 10,512 பேர் கொரோனா கிருமித்தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டு இருந்தனர். 214 பேர் மாண்டுவிட்டனர்.

