மட்ரிட்: முடக்க நடவடிக்கைக்கான சில கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் கீழ் வேலைக்குத் திரும்பும் மக்களுக்கு ஸ்பெயின் அரசாங்கம் புதிய வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அத்தியாவசிய மற்றும் முக்கிய வர்த்தகங்களைத் தவிர மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து ஸ்பெயின் முடக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மார்ச் 23ஆம் தேதிக்குப் பிறகு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஸ்பெயினில் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இந்நிலையில், ஆயிரக்கணக்கானோர் வேலைக்குத் திரும்பும் வகையில், இன்று முதல் கட்டுமானம் மற்றும் உற்பத்தி போன்ற வேறு சில தொழில்கள் மீண்டும் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், மீண்டும் செயல்படவுள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குக் கட்டாயம் பாதுகாப்பு கவசங்கள் அளிக்க வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு இடையே குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முடக்க நடவடிக்கையை வெகு முன்னதாகவே தளர்த்தப்படுவதாக எழுந்துள்ள கவலைகளுக்கு மத்தியில், உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ்கா சில தொழில்கள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தவிர, முடக்க நடவடிக்கையில் எந்தத் தளர்வுகளும் கொண்டுவரப்படவில்லை என்றார்.
பொது போக்குவரத்து சந்திப்புகளில் பாதுகாப்பு படையினர் 10 மில்லியன் முகக்கவசங்களை வழங்குவர் என்றும் அவர் சொன்னார்.
ஸ்பெயினில் இதுவரை 16,353 பேர் மாண்டனர். 161,852 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் மருத்துவர்கள் உட்பட சுகாதாரத் துறையினர் என 25,000 பேரும் இதில் அடங்குவர்.

