இத்தாலியில் மீண்டும் அதிகரிப்பு
ரோம்: இத்தாலியில் கொவிட்-19 தொற்றுநோயால் இறந்தவர்களின் தினசரி எண்ணிக்கையும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் மீண்டும் உயர்ந்தன. முந்திய நாளில் 570ஆக இருந்த இந்த எண்ணிக்கை சனிக்கிழமையன்று 619ஆக உயர்ந்தது. ஏப்ரல் 6ஆம் தேதிக்குப் பிறகு மிக அதிகமான தினசரி இறப்பு எண்ணிக்கை இது.
மேலும் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4,694ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்திய நாளில் 3,951 என இருந்தது. இதற்கிடையே, முந்திய நாளைவிட (30,455) சனிக்கிழமையன்று (32,534) அதிகம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
மின்சாரப் பயன்பாடு குறைந்தது: கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாகப் பள்ளிகள், அலுவலகங்கள், பெரு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சில ஐரோப்பிய நாடுகளில் மின்சார உபயோகம் குறைந்துள்ளதாக ப்ரூகல் என்ற ஐரோப்பிய நிறுவனம் கண்டறிந்துள்ளது.
முடக்க நடவடிக்கை காரணமாக மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பது, வீட்டில் இருந்து வேலை செய்தல் போன்றவை காரணமாக மின்சார உபயோகம் அதிகரிக்கும் என்று கருதப்பட்ட நிலையில், மின்சார பயன்பாடு குறைந்துள்ளது. குறிப்பாக இத்தாலியில், கடந்தாண்டு இதே காலகட்டத்தைவிட தற்போதைய மின்சார பயன்பாடு 27% குறைந்துள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர்: மருத்துவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன்
லண்டன்: கிருமித் தொற்றால் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, தீவிர சிகிக்சை பிரிவில் இருந்த ஜான்சன் நேற்று முன்தினம் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் ''புது வாழ்க்கையைப் பெற்றிருக்கிறேன், மருத்துவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்,'' எனக் கூறியுள்ளார்.
நெருக்கடியில் மாஸ்கோ மருத்துவமனை
மாஸ்கோ: ரஷ்யாவில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாஸ்கோ மருத்துவமனைகள் நிரம்பி வருவதாக கிரெம்ளின் மாளிகை கூறியுள்ளது. மாஸ்கோவில் கொரோனா நோயாளிகளை இறக்கிவிடுவதற்காக அங்குள்ள மருத்துவமனைகளின் முன்பு 12க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
அமெரிக்கக் கடற்படை கப்பலில் 550 பேருக்குக் கிருமித்தொற்று
வாஷிங்டன்: அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் என்ற விமானம் தாங்கிப் போர்க்கப்பல் பிலிப்பீன்ஸ் அருகே உள்ள குவாம் தீவின் ஆப்ரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கப்பலில் இருந்த சில மாலுமிகளுக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கப்பலில் நோய்த்தொற்று வேகமாகப் பரவியதில் மேலும் கூடுதலாக 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அக்கப்பலில் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 550ஆக உயர்ந்துள்ளது.

