கொழும்பு: இலங்கையில் கடந்தாண்டு ஈஸ்டர் தினத்தில் 279 பேரைக் கொன்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை படையிரை மன்னித்து விட்டதாக இலங்கை ரோமன் கத்தோலிக்க தேவாலயம் கூறியுள்ளது.
கிருமித்தொற்று காரணமாக ஈஸ்டர் தின நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், பேராயர் மால்கம் ரஞ்சித்தின் ஈஸ்டர் தின திருப்பலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
அப்போது கடந்தாண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தாக்குதலை நினைவுகூர்ந்த அவர், "நம்மை அழிக்க நினைத்த, எதிரிகளுக்கு நாம் அன்பைக் கொடுப்போம். அவர்களை மன்னித்தோம்," என்றார்.
கடந்தாண்டு மூன்று தேவாலயங்கள், மூன்று சொகுசு தங்கு விடுதிகள் ஆகியவற்றில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 279 பேர் மாண்டனர். 600 பேர் காயமடைந்தனர்.
இதை முதலில் பயங்கரவாத தாக்குதல் என்ற அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேன, பின்னர் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைவரிசை இது என்றார்.
தாக்குதல் நடந்த இரண்டு தேவாலயங்களில் கதவுகள் மூடப்பட்ட நிலையில், ஈஸ்டர் நிகழ்வுகள் நடந்தன. இதற்கிடையே, இலங்கையில் சுமார் 200 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஏழு பேர் மாண்டுள்ளனர்.

