சோல்: அமெரிக்காவிற்கு 600,000 கிருமித்தொற்று சோதனைக் கருவிகளை அனுப்ப தென்கொரியா திட்டமிட்டுள்ளதாக சோல் அதிகாரி ஒருவர் சொன்னார்.
கிருமித்தொற்றால் கடும் உயிர்ச்சேதங்களை எதிர்கொண்டு வருகிறது அமெரிக்கா. இந்நிலையில், கடந்த மாதம் 25ஆம் தேதி தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கொரோனா பரிசோதனைக் கருவிகளை அனுப்பும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு அமெரிக்க ஃபெடரல் அவசரகால சரக்கு விமானத்தில் இக்கருவிகள் அனுப்பப்படவுள்ளதாகப் பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த முதற்கட்ட ஏற்றுமதிக்குப் பிறகு மேலும் 150,000 கருவிகள் உள்ளூர் சில்லறை விற்பனையாளர் மூலம் அமெரிக்காவிற்கு விற்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதற்கு முன் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு தென்கொரியா ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் இது அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து தென்கொரியாவிற்குக் கிடைத்துள்ள நேரடி ஏற்றுமதி வாய்ப்பாகும்.

