ஹாங்காங்: கொவிட்-19 கிருமித்தொற்று வேகமாகப் பரவாதிருக்க மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகளுக்காக சிங்கப்பூரைப் போலவே ஹாங்காங்கும் பாராட்டைப் பெற்று வருகிறது.
குறிப்பாக, நேற்று முன்தினம் ஹாங்காங்கில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாவது முறையாக ஒற்றை இலக்கத்தில் இருந்தது. அன்று பதிவான எண்ணிக்கை ஐந்து மட்டுமே. மார்ச் 15ஆம் தேதி 149 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவான ஹாங்காங்கில் அந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 1005ஐ தொட்டுள்ளது. அதேபோல மார்ச் 15ஆம் தேதி 226 சம்பவங்கள் மட்டுமே பதிவான சிங்கப்பூரில் திங்கட்கிழமை நிலவரப்படி 2,532 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2003ஆம் ஆண்டின் சார்ஸ் நோய் பரவலில் கற்றுக்கொண்ட பாடம் இரு நாடுகளுக்கும் கைகொடுத்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகளைப்போல நகரத்தை முற்றாக முடக்காமலேயே கிருமிப் பரவல் நடவடிக்கைகளை சிங்கப்பூரும் ஹாங்காங்கும் செயல் படுத்தி வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஹாங் காங் வெற்றி சிங்கப்பூருக்கும் கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

