நியூயார்க்: கிருமித்தொற்றால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பலியானவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ள நிலையில், மோசமான காலம் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியோமோ.
நியூயார்க்கில் நேற்று முன்தினம் பலியானவர்களின் எண்ணிக்கை 671 ஆகும். கடந்த ஏப்ரல் 5ஆம் தேதிக்குப் பிறகு ஆகக் குறைவான எண்ணிக்கையாகும் இது.
இந்நிலையில் பேசிய கியோமோ, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் சராசரி குறைந்து வருவது மற்றும் தொற்றுநோய்க்கான வளைவு தட்டையாகி வருவதாகவும் சொன்னார். எனவே பொருளியலை படிப்படியாக மீண்டும் தொடங்க தாம் திட்டமிட்டு வருவதாகக் கூறினார்.
ஆனால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னதாகவே விலகிக் கொள்ளப்பட்டுவிட்டால், கிருமித் தொற்றால் மீண்டும் நிலைமை மோசமாகக்கூடும் என்றும் சொன்னார்.
மேலும் வீட்டில் தங்கும் உத்தரவைக் கூட்டாகத் தளர்த்துவது தொடர்பில், அண்டை மாநிலங்களான நியூஜெர்சி, கனெக்டிகட், டெலாவேர், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாநிலங்களுடன் நியூயார்க் நெருக்கமாக பணியாற்றும் என்றார் கியோமோ.
இதையடுத்து, 10 மாநிலங்களில் படிப்படியாக பொருளியலை மீண்டும் தொடங்குவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்கப் பொருளியலை மீண்டும் திறப்பதற்கும் சமூக இடைவெளி விதியைத் தளர்த்த மாநிலங்களுக்கு உத்தரவிடவும் தனக்கு 'முழு' அதிகாரம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர்களுக்குத் தனது நிர்வாகம் சில நாட்களில் வழிகாட்டுதலை வெளியிடும் என்றும் அவர் கூறினார்.
தனது உத்தரவை ஏற்க மறுக்கும் ஆளுநர்கள் அரசியல் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஆனால் டிரம்பின் கூற்றை சட்ட வல்லுநர்களும் சில ஆளுநர்களும் மறுத்தனர். அரசியலமைப்பின் 10வது திருத்தம் மத்திய அரசுக்கு வழங்கப்படாத அதிகாரங்களை, மாநிலங்களுக்கு வழங்குகிறது என்கின்றனர் அவர்கள்.

