கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா கிருமி சிகிச்சையில் பயன்படுத்துவதற்காக அந்த நாட்டுக்கு மலேரியா மாத்திரைகளை அனுப்ப இந்தியா இணங்கி இருக்கிறது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற அந்த மாத்திரை உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது.
கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் அந்த மாத்திரை நல்ல பலன் தருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் உலகம் முழுவதும் அந்த மாத்திரைக்குப் பெரும் தேவை ஏற்பட்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர்கூட மாத்திரைகளை அனுப்புமாறு இந்தியாவிடம் கேட்டிருந்தார்.
மனிதாபிமான அடிப்படையில் கொரோனா கிருமித்தொற்று நாடு களுக்கு மலேரியா மாத்திரைகளை விற்பதற்கு இம்மாதம் புதுடெல்லி இணங்கியது.
இந்த நிலையில், மலேசியாவுக்கும் அந்த மாத்திரையை விற்க இந்தியா இணங்கி இருப்பதாக மலேசியாவின் துணை வெளியுறவு அமைச்சர் கமாருதின் ஜாஃபர் கூறினார் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் நேற்று தெரிவித்தது.
மலேசியாவுக்கு 89,100 மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியா அனுமதித்ததாக அவர் கூறினார்.
தனக்கு ஒரு மில்லியனுக்கும் அதிக மாத்திரை தேவை என்று இந்தியாவிடம் மலேசியா கேட்டு இருப்பதாக மலேசியாவைச் சேர்ந்த இரண்டு தகவல் வட்டாரங்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதனிடையே, மலேசியாவில் புதிதாக 85 பேரைக் கிருமி தொற்றியது என்றும் மார்ச் மாதம் 18ஆம் தேதி கட்டுப்பாடுகள் அமலானதற்குப் பிறகு இதுவே ஆகக் குறைந்த அளவு என்றும் சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
புதிதாக ஒருவர் மாண்டதாகவும் இதையும் சேர்த்து பலி எண்ணிக்கை 83 ஆனதாகவும் அமைச்சு தெரிவித்தது.

