வாஷிங்டன்: உலகம் முழுவதும் பரவி உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா கிருமிக்கு தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கிருமி உருவான சீனாவின் வூஹான் நகரம் முதல் அமெரிக்கா வரை பல்வேறு நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் இணக்கத்துடன் செயல்பட்டு தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 12 முதல் 18 மாதங்களில் புதிய தடுப்பூசி கண்டு பிடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
இம்மாதம் 8ஆம் தேதி 'ஜர்னல் நேச்சுர்' என்ற இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு கட்டுரை, உலகம் முழுவதும் 115 தடுப்பூசி ஆய்வுகள் நடைபெற்று வருவ தாகத் தெரிவிக்கிறது. இவற்றில் 78 ஆய்வுகள் வெளிப்படையாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஆய்வுகள் வெற்றி பெற்று 12 அல்லது 18 மாதங்களுக்குள் தடுப்பூசி தயாராகி விடும் என கூறப்படுகிறது.
பொதுவாக தடுப்பூசி கண்டுபிடிக்க பத்து முதல் 15 ஆண்டுகள் தேவைப் படலாம்.
இபோலா தொற்று நோய் (ஐந்து ஆண்டுகள்), பொன்னுக்கு வீங்கி (நான்கு ஆண்டுகள்) போன்ற ஒரு சில சம்பவங்களுக்கு மட்டும் ஐந்து ஆண்டுகளுக்குள் தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எச்ஐவி கிருமி போன்றவற்றுக்கு இன்னமும் தடுப்பூசி வெற்றி பெறவில்லை.
"அறிவியலை அறிவியலாகத்தான் பார்க்க வேண்டும், நடைமுறையில் விரைவாக கண்டுபிடிக்க முடிவது சாத்தியமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்," என்று தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பேயர் கல்லூரியின் தேசிய வெப்பமண்டல மருத்துவ நிலையத்தின் இணை முதல்வர் டாக்டர் மரியா எலினா போட்டாஸி கூறினார். இரண்டு சம்பவங்களைத் தவிர மற்ற எந்த நோய்க்கும் தடுப்பூசி அவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறிய அவர், "தற்சமயம் கொரோனா கிருமிக்கு எதிராக 12 முதல் 18 மாதங்களில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பு உள்ளது," என்றார்.

