கோலாலம்பூர்: தென்சீனக் கடலில் சீனா தனது இருப்பை உறுதிப்படுத்த கிருமிப் பரவல் காலத்தைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சீன அரசாங்க ஆய்வுக் கப்பல் ஒன்று மலேசியாவுக்கு அருகே தெற்கு நோக்கி நகர்ந்ததாகக் கப்பல் கண்காணிப்பு தகவல் கூறுகிறது.
ஹையாங் திஜி 8 என்ற அந்தக் கப்பல் இந்த வாரம் வியட்னாமில் காணப்பட்டது. நேற்று அக்கப்பல் புருணை, மலேசியா கடற்கரையிலிருந்து 35 கி.மீ தூரத்தில் ஓர் ஆய்வைத் தொடங்கியதாகத் கப்பலைக் கண்காணிக்கும், மரைன் டிராஃபிக் என்ற வலைத்தளத்தின் தகவல்கள் கூறுகின்றன.
இது மலேசியாவின் முக்கிய பொருளாதார மண்டலத்திற்கு வடக்கே, வியட்னாம், மலேசியா ஆகிய நாடுகளால் உரிமை கோரப்பட்ட கடல் பகுதிக்கு அருகே காணப்பட்டது.
மலேசிய கடலோர காவல்படை கப்பலான கே.எம்.பெக்கன் சீனக் கப்பலைப் பின்தொடர்வதாக மலேசிய கடல்சார் வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஆய்வுக் கப்பல் ஏழு சீனக் கடலோர காவற்படை கப்பல்களால் பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தகவல் அறித்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சீனக் கப்பல் வழக்கமான நடவடிக்கைகளைத்தான் மேற்கொண்டு வருவதாக சொன்ன சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர், பெய்ஜிங் மீது பொய் குற்றம்சாட்ட அமெரிக்க அதிகாரிகள் தென்சீனக் கடல் பிரச்சினையை பயன்படுத்துவதாகவும் சாடினார்.
கொரோனா கிருமிப் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த தென்கிழக்கு ஆசிய நாடுகள் விதித்த நடமாட்டத் தடைகளுக்கு மத்தியில் தென்சீனக் கடலில் ஹையாங் திஜி 8 காணப்படுகிறது.
எல்லைப் பிரச்சினை தொடர்பில், பிற நாடுகளின் கவனச்சிதறலைப் பயன்படுத்திக் கொள்வதை நிறுத்தும்படியும் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும்படியும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, குறைந்த தாக் கத்தையுடைய நிலத்தடி அணுவாயுத சோதனைகளை சீனா ரகசியமாக நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

