சோல்: கொரோனா கிருமிப் பரவல் காரணமாக உலக நாடுகள் பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தள்ளிவைத்துள்ள நிலையில், அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் தென்கொரியாவில் புதன்கிழமையன்று நாடாளுமன்றத் தேர்தலில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் (படம்) தலைமையிலான ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் 300 இடங்களில் நடைபெற்ற இத்தேர்தலில் 66.2% வாக்குகள் பதிவாகின. இது 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான ஆக அதிகமான வாக்குப்பதிவு.
மக்கள் அனைவரும் கையுறை, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்களித்தனர்.
இதில் 163 இடங்களை வென்ற, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் அதிபர் மூன்னிற்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளதாக கணிக்கப்பட்ட நிலையில், கிருமித்தொற்று பரவலைத் திறமையாகக் கையாண்டு கட்டுப்படுத்தியதன் விளைவாக மூன் ஜே இன்னுக்கு கொரிய மக்கள் வெற்றியை அளித்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கொரியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனா கிருமித்தொற்றில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டது. தற்போது நோய் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தென்கொரியா வெற்றி கண்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக தென்கொரியாவில் 10,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 225 பேர் பலியாகினர்.

