வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளியலை மீண்டும் தொடங்குவதற்கான மூன்று நிலை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள அதன் அதிபர் டிரம்ப், தங்கள் மாநிலங்களில் முடக்க உத்தரவைத் தளர்த்துவது குறித்த முடிவை எடுக்கும் பொறுப்பை அதன் ஆளுநர்களிடமே ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றால் இதுவரை 6,77,570 பாதிக்கப்பட்டுள்ளனர், பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்குகிறது.
நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் அமெரிக்காவின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கொரோனா தடுப்புப் பணிக்குழு கூட்டத்தில், நம்முடைய அடுத்த போர் அமெரிக்காவை மீண்டும் பொருளாதாரப் பாதைக்கு கொண்டு செல்வதுதான் என்றார் டிரம்ப்.
அப்போது அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு பாதைக்குக் கொண்டுவருவதற்கான 3 நிலை வழிகாட்டுதல்களை அவர் வெளியிட்டார்.
அதில் முதல் நிலையாக ஊரடங்கு நடவடிக்கையில் இருக்கும் மாநில மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும், கூட்டம் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் கடும் கட்டுப்பாடுகளுடன், சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும்.
இரண்டாவது நிலையில், நோய்த்தொற்று மீண்டும் பரவாது என நம்பப்படும் இடங்களில் மக்கள் தங்களின் அத்தியாவசியமற்ற பயணத்தை மீண்டும் தொடங்கலாம். 50 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடிய பொதுக் கூட்டங்களை தவிர்க்க வேண்டும், பள்ளிகள் மற்றும் பகல்நேர மதுபானக் கூடங் களை மீண்டும் இயக்கலாம்.
மூன்றாவது நிலையில், நோய்த்தொற்று பரவுவது குறைந்து வருவது, அதன் வளைகோடு சமமானதாக தெரிந்தால், மக்கள் சக மக்களோடு பேசுவதற்கும், பழகுவதற்கும் பொது இடங்களில் அனுமதிக்கலாம். ஆனால் சமூக இடைவெளி அவசியம். பணியிடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கலாம் ஆனால் கட்டுப்பாடு இருக்காது, மருத்துவமனைகள், பாதுகாப்பு இல்லங்கள் தடையின்றி இயங்கலாம், மதுபான விடுதிகளில் செயல்பாடுகளை அதிகரிக்கலாம்.
ஒவ்வோர் மாநிலத்திலும் முடக்க உத்தரவைத் தளர்த்துவது என்பது மிகவும் கவனமாகச் செய்ய வேண்டிய நடவடிக்கை. மாநில ஆளுநர்கள் இதில் வேகமாக முடிவெடுக்க வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக் கொண்டார்.
மேலும் நியூயார்க்கில் மே மாதம் 15 ஆம் தேதி வரை முடக்க நிலை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கியோமோ அறிவித்ததையடுத்து நியூஜெர்சி மாநில ஆளுநரும் அதே அறிவிப்பை அறிவித்துள்ளார்.

