லண்டன்: பிரிட்டனில் கொரோனா கிருமித்தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் ஊழியர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உடுப்பு உள்ளிட்ட சாதனங்களை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த நாட்டு அரசாங்கம் யோசனை தெரிவித்துள்ளது.
இதை மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார்கள். கொரோனா கிருமித்தொற்று காரணமாக பாதுகாப்பு உடுப்புகள் உள்ளிட்ட மருத்துவச் சாதனங்களுக்கு பிரிட்டனில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அந்த நாட்டில் 15,464 பேர் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டார்கள். இந்த நிலையில் அரசாங்கம் வெள்ளிக்கிழமை மருத்துவமனைகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.
சுகாதார பராமரிப்பு ஊழியர்கள் உடல் முழுவதும் மூடும்படி அணியும் பாதுகாப்பு உடுப்புகளை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த வழிகாட்டி நெறிமுறைகள் குறிப்பிட்டன.
ஆனால் உடனடியாக மருத்துவர்களும் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களும் அந்த நெறிமுறைகளை ஏற்க மறுத்துவிட்டார்கள். அரசாங்கம் போதிய அளவுக்கு பாதுகாப்புச் சாதனங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பதையே இது காட்டுகிறது என்று பலரும் கூறினார்கள்.
பற்றாக்குறை நேரத்தில், கூடுமானவரை ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் மருத்துவர்களுக்குத் தெரிந்து இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதே அரசாங்கம் வெளியிட்டு உள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் நோக்கம் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, புதிதாக 55,000 உடுப்புகள் விரைவில் வந்து சேரும் என்று சுகாதார அமைச்சர் மார்ட் ஹான்கூக் நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்றிடம் தெரிவித்தார்.
பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் பணிக்குச் செல்லாமல் இருக்க ஊழியருக்குச் சட்டபூர்வமான உரிமை இருக்கிறது என்று தான் தன் உறுப்பினர்களிடம் கூறி இருப்பதாக 'யுனைட்' என்ற தொழிற்சங்கம் கூறியது. புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ள அரசு அதன் தொடர்பில் தன்னிடம் ஆலோசிக்கவில்லை என அரசு தாதிமை கல்லூரி குறிப்பிட்டது.
இதனிடையே, பிரிட்டனில் நான்கு வாரங்களுக்கு முன் நடப்புக்கு வந்த கட்டுப்பாடுகளை அகற்றுவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்று அமைச்சரவை அலுவலக அமைச்சர் மைக்கேல் கோவ் கூறினார்.

