ஒரு மாதம் கழித்து பாலர் பள்ளிகளை மீண்டும் திறக்கும் நார்வே

ஒரு மாதம் கழித்து பாலர் பள்ளிகளை மீண்டும் திறக்கும் நார்வே

1 mins read
16cfc9c2-a0f2-42b6-be9d-0146f20bbd8a
நார்வேயின் நோர்பிகட்டா என்னும் இடத்தில் உள்ள மொசைக் பாலர் பள்ளி. படம்: இபிஏ -

ஓஸ்லோ: கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக நார்வே தெரிவித்துள்ளது. இதையடுத்து நேற்றிலிருந்து அது பாலர் பள்ளிகளை மீண்டும் திறந்துள்ளது. கிருமித்தொற்று காரணமாக பாலர் பள்ளிகள் ஒரு மாதத்துக்கு மூடப்பட்டிருந்தன.

கிருமித்தொற்றால் பிள்ளைகள் அவ்வளவாகப் பாதிப்படையவில்லை என்பதால் பாலர் பள்ளிகளை மீண்டும் திறப்பது சாத்தியமாகி உள்ளதாக நார்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நார்வே அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து பெற்றோர் சிலர் கவலை தெரிவித்தனர். ஆனால் பாலர் பள்ளிக்கு மாணவர்கள் செல்வது பாதுகாப்பானது என்று நார்வேயின் கல்வி அமைச்சர் கூரி மெல்பி வலியுறுத்தியுள்ளார்.

சுவீடன்: எங்கள் சர்ச்சைக்குரிய உத்திகள் பலன் தந்துள்ளன

ஸ்டோக்ஹம்: கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ள மற்ற நாடுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மாறான நடவடிக்கைகளை சுவீடன் எடுத்து வருகிறது.

இருப்பினும் இந்தச் சர்ச்சைக்குரிய உத்திகள் தங்களுக்குப் பலன் தந்துள்ளதாக சுவீடனின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளைப் போலவே சுவீடன் அதிக கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவில்லை. இருப்பினும், தங்கள் நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் குறைய தொடங்கியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். சுவீடன் அதன் பள்ளிகள், உடற்பயிற்சிக்கூடங்கள், உணவகங்கள், மதுபானக்கூடங்கள் ஆகியவற்றை மூடவில்லை. ஆனால் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளும்படியும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படியும் சுவீடன் அரசாங்கம் தனது மக்களைக் கேட்டுக்கொண்டது. நேற்று முன்தின நிலவரப்படி கிருமித்தொற்று காரணமாக சுவீடனில் 1,540 பேர் மாண்டுவிட்டனர்.