கொவிட்-19: வசிப்பிடத்தைவிட்டு வெளியேறியதாக மூவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
c76ef48c-306a-46d6-88f1-a96a070d422b
(இடமிருந்து) அமெரிக்க விமானி பிரையன் டூகன் யர்கன், சிங்கப்பூரர்களான சோங் சுன் வா, சித்தி வான் சு'அய்டா ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீட்டில் இருக்கும் உத்தரவை மீறியதன் தொடர்பில் இரண்டு சிங்கப்பூரர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த வர்த்தக விமானி ஒருவர் ஆகிய மூவர் மீது இன்று (ஏப்ரல் 21) குற்றம் சாட்டப்பட்டது.

ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு ஏப்ரல் 3ஆம் தேதி வந்த அமெரிக்க விமானி பிரையன் டூகன் யர்கன், 44, உத்தரவின்படி ஏப்ரல் 17ஆம் தேதி வரை தாம் தங்கியிருந்த ஹோட்டல் விடுதி அறையிலிருந்து வெளியேறக்கூடாது.

இருப்பினும் ஏப்ரல் 5ஆம் தேதி எம்ஆர்டி ரயிலில் சிட்டி ஹால் நிலையத்திற்கு அவர் பயணம் செய்திருந்ததாகவும் சைனாடவுன் பாயிண்ட் கடைத்தொகுதிக்கு அவர் நடந்துசென்று பொருட்கள் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 3 மணிநேரமாக வெளியிடங்களில் யர்கன் இருந்திருக்கிறார்.

மார்ச் 17ஆம் தேதி இந்தோனீசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய 47 வயது சோங் சுன் வா, மார்ச் 31ஆம் தேதி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். ஆனால் மூன்று முறை அவர் வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

மார்ச் 25ஆம் தேதி ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய சித்தி வான் சு'அய்டா, 25, ஏப்ரல் 8ஆம் தேதி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். ஆனால், மார்ச் 30ஆம் தேதி சிகரெட் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக உட்லண்ட்சில் இருக்கும் தமது வீட்டைவிட்டு வெளியேறி விஸ்தா பாயிண்ட் கடைத்தொகுதிக்கு நடந்து சென்றிருக்கிறார்.

அத்துடன், குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் தொலைபேசி அழைப்புகளை ஏற்க சித்தி மறுத்திருக்கிறார் என்று ஆணையம் தெரிவித்தது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு ஆடவர்களும் குற்றத்தை ஒப்புக்கொள்ளப் போவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். வழக்கறிஞரின் சேவையைப் பெற முயற்சி செய்வதாக சித்தி கூறியிருந்தார்.

மூவரும் தலா $5,000 பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையும் $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்