சோல்: இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அமெரிக்கா கூறும் நிலையில், கிம்மின் உடல்நிலை மோசமான நிலையில் இல்லை என்று தென்கொரியா மறுப்பு தெரிவித்துள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், கடந்த வாரம் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளிலும் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட கிம் 'பெரும் ஆபத்தில்' இருப்பதாக ஒரு அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது சிஎன்என் ஊடகம்.
ஆனால், 36 வயதான கிம் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் குணமடைந்து வருவதாகப் பெயர் வெளியிடா விரும்பாத ஓர் வடகொரிய ஆதாரத்தை மேற்கோள்காட்டி கூறியுள்ளது தென்கொரியாவின் ஊடகமான டெய்லி என்.கே.
அதிகப் புகைபிடித்தல், உடற்பருமன், வேலைப்பளு ஆகியவற்றின் காரணமாகக் சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் கிம்மின் உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி கிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
சீனாவும் கிம்மின் உடல்நலம் குறித்த அறிக்கைகள் தனக்குத் தெரியும் என்று கூறியது, ஆனால் அவரது உடல்நலம் குறித்த தற்போதைய நிலவரம் குறித்து சீனா எதுவும் கூறவில்லை.
அதேசமயம் கிம்மின் உடல்நலம் குறித்த தகவல்களைத் திரட்ட முயன்று வருவதாக ஜப்பான் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
இதேபோல் 2014ஆம் ஆண்டும் கிம் ஜோங்கின் உடல்நிலை கடுமையாக மோசமடைந்ததாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்டு டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் நலம்பெற வாழ்த்துவதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

