கோலாலம்பூர்: தென்சீனக் கடலில் சீனாவும் மலேசியாவும் உரிமை கோரும் கடல் பகுதிக்கு அருகே இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கடற்படை பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த வாரம் மலேசிய நிறுவனமான பெட்ரோனாசின் ஆய்வுக் கப்பலுக்கு அருகில், சீன அரசாங்கத்தின் ஹையாங் திஜி 8 என்ற ஆய்வுக் கப்பல், ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. சில மாதங்களுக்கு முன்பு, வியட்னாமிலும் சீன ஆய்வுக் கப்பல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதற்கிடையே, கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தனது அண்டை நாடுகள் கவனம் செலுத்தி வரும் நேரத்தில், அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனாவின் போக்கு ஆத்திரமூட்டுவதாக அமெரிக்கா தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் 'பங்கர் ஹில்' எனும் ஏவுகணை கப்பல் ஆகியவை தென் சீனக் கடலில் நிறுத்தப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிரிவு செய்தித் தொடர்பாளர் நிக்கோல் ஸ்வெக்மேன் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.

