ஜகார்த்தா: உலக மக்கட்தொகையில் நான்காவது இடத்தில் உள்ள இந்தோனீசியாவில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்காக மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தடை விதித்துள்ளார்.
அதிகமானோர் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முற்படும் இந்த வேளையில், கிருமிப் பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தால் இந்தோனீசிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
போக்குவரத்து அமைச்சு மேற்கொண்ட ஆய்வில், 24 விழுக்காட்டினர் தற்போதைய சூழலிலும் பெருநாள் கொண்டாட்டத்திற்காக தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்புவது தெரியவந்ததையடுத்து, தடை விதிக்கப்பட்டுள்ளதாக விடோடோ தெரிவித்தார்.
இந்தோனீசிய அறிவியல் கழகம் மேற்கொண்ட ஆய்வில் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டபோதும் 44 விழுக்காட்டினர் சொந்த ஊருக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்தோனீசியாவில் பெருநாள் கொண்டாட்டத்திற்கான பொது விடுமுறை நாட்கள் டிசம்பர் 28-31 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
அங்கு நேற்று வரை 7,135 பேர் கிருமித் தொற்றுக்கு ஆளாகினர், 616 பேர் மாண்டுவிட்டனர்.

