மணிலா: கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை சில ஆசிய பசிபிக் நாடுகள் தளர்த்த திட்டமிட்டு வருகின்றன.
இந்நிலையில், விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும் புதிய வழக்கநிலைக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடரக்கூடும் என்று கூறிய உலக சுகாதார நிறுவனம், அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
கொரோனா கிருமித்தொற்றுக்கு முந்திய நிலை உடனடியாக திரும்பாது என்று உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கு பசிபிக் வட்டார இயக்குநர் டாக்டர் டகாஷி காசாய் இணையம் வழி நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
"புதிய வாழ்க்கைமுறைக்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும். இந்த நிலை எப்போது வரை நீடிக்கும் எனத் தெரியவில்லை. கிருமிப் பரவலைத் தடுக்க எடுக்கப்படும் உத்திகள் தொடர வேண்டும். குறைந்தது கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் வரை அல்லது பலனளிக்கும் சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்படும் வரை நாம் புதிய வழக்கத்துக்குத் தயாராக வேண்டும்," என்றார் டாக்டர் காசாய்.
கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலையைப் படிப்படியாகத்தான் தளர்த்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
கட்டுப்பாடுகளை உடனடியாக முற்றிலும் தளர்த்தினால் அது ஆபத்தாக முடிந்துவிடும் என்றும் பலருக்குக் கிருமித்தொற்று ஏற்படக்கூடும் என்றும் அது கூறியது.
முடக்கநிலையைத் தளர்த்த எண்ணம் கொண்டிருக்கும் அரசாங்கங்கள் அதை மிகுந்த கவனத்துடன் படிப்படியாகச் செய்ய வேண்டும் என்றும் கிருமித்தொற்று நிலைமையை அது மிக அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் டாக்டர் காசாய் கூறினார்.
இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்று தொடங்கிய இடம் குறித்து தற்போதைக்கு உறுதி செய்வது சாத்தியமல்ல என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

