வாஷிங்டன்: கொரோனா கிருமித்தொற்றால் அமெரிக்காவின் பொருளியல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அமெரிக்காவுக்குள் வெளிநாட்டவர்கள் வருவதை அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தவிருக்கிறார். அமெரிக்கர்களின் வேலைகளைப் பாதுகாக்க இவ்வாறு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டார்.
அதிபர் டிரம்ப்பின் இந்த முடிவுக்கு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் ஒழுங்காக எடுக்கவில்லை என்றும் தாம் செய்த தவறுகளை மறைக்கவும் மக்களை திசை திருப்பவும் அவர் இந்த அறிவிப்பை செய்துள்ளதாக அவர்கள் குறைகூறினர்.
கிருமித்தொற்று காரணமாக வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டு மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
அவர்களுக்கு உதவ குடிநுழைவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்போவதாக அதிபர் டிரம்ப் வாதிடுகிறார்.
மரண எண்ணிக்கை 42,000ஐ கடந்தது
இதற்கிடையே, நேற்று முன்தின நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்றால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 42,094ஐ எட்டியது. நேற்று முன்தினம் மட்டும் 1,433 பேர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.
நியூயார்க்கில் நேற்று முன்தினம் 478 பேர் உயிரிழந்தனர். கடந்த இரண்டு வாரங்களில் இதுவே அங்கு பதிவாகியுள்ள ஆகக் குறைவான மரண எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இயல்புநிலைக்குத் திரும்புவது குறித்து மாறுபட்ட கருத்துகள்
அமெரிக்க மாநிலங்களிடம் போதுமான கொரோனா கிருமித்தொற்று மருத்துவப் பரிசோதனைச் சாதனங்கள் இருப்பதாகவும் மாநிலங்கள் இயல்புநிலைக்குத் திரும்பலாம் என்றும் அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள்ளார்.
இயல்புநிலைக்குத் திரும்ப கடந்த 14 நாட்களாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, ஒருவேளை நிலைமை மோசமடைந்தால் அதைச் சமாளிக்கக்கூடிய அளவுக்கு மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும்.
துணை அதிபரின் கருத்துகள் ஒரு புறம் இருக்க, கிருமித்தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகளை மூன்று மடங்காக அதிகரித்த பிறகே அமெரிக்காவால் இயல்பு
நிலைக்குத் திரும்ப முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

